மறைந்த நடிகரும், துக்ளக் பத்ரிகையின் நிறுவனருமான சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி நேற்று(84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வி.கே.சசிகலா தெரிவித்துள்ளதாவது:
’’பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அம்மையார் சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.