நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே தி.மு.க-வின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’பொம்மை முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும், இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சி என்று வசனம் பேசி, தமிழக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் திராவக மாடல் ஆட்சிக்கும், இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஊறுகாயாக தேவைப்பட்டன. தொட்டுப்பார், கட்டிப்பார், வெட்டிப்பார், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசைப் பார்த்து வறட்டு சவால்களை தானும் விட்டு, கூட்டணிக் கட்சியினரையும் விட்டு வசைபாடச் செய்தார். அந்நாடகத்தை தொடர்ந்து நடத்தினார். இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை, குடும்ப நலன் முக்கியம் என்றவுடன் தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார்.
சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் திரு. மு.க.ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த கவலையும் இல்லை. தன்னுடைய கபடநாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்திற்கும், பூமிக்கும் தாவி குதித்திருக்கிறார்.
புரட்சித் தலைவர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும், ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் தார்பாயில் வடிகட்டிய பொய் மூட்டை ஒன்றை ‘நா நயம் மிக்கவரின் மகன்’ அவிழ்த்து விட்டிருக்கிறார். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவையொட்டி எனது தலைமையிலான அம்மா அரசில், மாவட்டந்தோறும் கோடிக்காணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது பெயரைச் சூட்டினோம். மேலும், புரட்சித் தலைவர் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம் – என் தலைமையிலான தமிழக அரசு நடத்தியது.
மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே தி.மு.க-வின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுக-வினர். தமிழ் நாட்டில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் திரு. ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.