இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.47 கோடி மதிப்பிலான புதியக் கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்கள், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கான பதிவுத் தொகையாக பெறப்பட்ட ரூ.3.42 கோடி மற்றும் அரசு நிதி ரூ.6.85 கோடி என மொத்தம் ரூ.10.27 கோடி செலவில் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உயர்தர புற்றுநோய் சிகிச்சைக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
அதே போல, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.35.81 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடமும் விரைவில் கட்டப்படவுள்ளது.
இந்த வகையில், நமது #ChepaukTriplicane சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.47 கோடி மதிப்பிலான புதியக் கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினோம்.
சென்னை மக்களின் நோயற்ற வாழ்வுக்கு தொடர்ந்து துணை நின்று வரும் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பணிகள் தொய்வின்றி தொடரட்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.