
18 வது மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுகம், த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், தமிழ் நாடு பாஜக தலைவரும், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுபவருமான அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொள்ளும்போது, வரும் ‘ஜூன் 4-க்கு பிறகு அதிமுக தினகரன் வசமாகும்’’என்று கூறியிருந்தார்.
இதற்கு அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமி,’’அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’அண்ணாமலை இன்று #அதிமுக -வை பற்றி கூறியுள்ளது!
* ஜூன் 4-க்கு பிறகு அதிமுக தினகரன் வசமாகும்.
* அதிமுக முன்பே தினகரன் பக்கம் சென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்கா மாட்டார்.
* அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.

* விரைவில் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக இருக்காது.
அம்மா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தமிழக வாக்காளர்களும் குரல் கொடுத்தார்கள்.
நான் தேர்தல் ஆணையத்தில் அதற்கு வழக்கு தொடுத்திருந்தேன். ஓ.பி.எஸ் அதன் பிறகு தர்மயுத்தம் செய்தார். அம்மாவால் 2011-ல் வெளியேற்றப்பட்ட சசிகலாவின் குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று போராடி அதில் தொண்டர்கள் வெற்றிகண்டார்கள்.
அதற்கு பிறகு EPS & OPS இருவரும் இணைந்து தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிற விதியை பாஜக ஆதரவோடு திருத்தி பொதுக்குழுவாள் தலைமை, ஒற்றை வாக்கு இரட்டை தலைமை மற்றும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவேண்டும் என்கிற எல்லா EPS & OPS நடவடிக்கைகளுக்கு #பாஜக துணைபோனது.
ஆனால் இன்று அண்ணாமலை இந்த கருத்துக்களை சொல்வது யார் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார்களோ, அதிமுகவை பாஜகவிற்கு துணை அமைப்பாக கொண்டுசெல்ல யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்கிற பாஜகவின் முயற்சியை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஒன்றுபட்டு முறியடிப்பான்.
அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறாரே ஒழிய பாஜகவை வளர்ப்பதில் அல்ல. இந்த தேர்தலில் தலைகீழாக நின்றும் அதிமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை பாஜக வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியின் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள்.
அதிமுகவை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவோம். தொண்டர் பலத்தை உறுதிப்படுத்துவோம் தேர்தலுக்கு பிறகு தொண்டர்களால் ஒரு தலைமையை உருவாக்க முயற்ச்சிப்போம்’’என்று தெரிவித்துள்ளார்.
#EditedBySinoj